சனி, 23 மே, 2020

மழையைக் கொணரும் குருவிகள்

மழையைக் கொணரும் குருவிகள்


கோடை வெயிலில்
காய்ந்து போன கிணறும்
வறண்டு போன குளமும்
தண்ணீரைத் தொலைத்திருக்க
தண்ணீர் தேடி நாக்கு வறண்டிருந்த
என் மாடுகளுக்காக
கருவேலமரத்துக்
கற்றாழைக்குருவிகளிடத்து
உதவி கேட்டிருந்தேன்

உதவுவதாய்ச் சொல்லிவிட்டு
இரண்டு நாட்களுக்கு முன்னர்
வானேறிக் கடல்நோக்கிப் பறந்த குருவிகள்
இப்போது மேகங்களை
இழுத்துக்கொண்டு வருகின்றன
எம் கிணறுகளை நோக்கியும்
எம் குளங்களை நோக்கியும்

பருவமழை துவங்கிவிட்டதாய்
வானொலியிலும்
தொலைக்காட்சியிலும்
செய்தித்தாள்களிலும்
அறிவிப்பு செய்கிறீர்கள் நீங்கள்

-சௌவி

வியாழன், 14 மே, 2020

இழப்பின் தேடல்


இழப்பின் தேடல்


ஒரு குரங்கு
இன்னொரு குரங்கிற்கு
பேன் பார்த்துக்கொண்டிருக்கிறது

ஒரு குரங்கு
தன் குழந்தைக்குப்
பாலூட்டிக்கொண்டிருக்கிறது

இரண்டு குட்டிக்குரங்குகள்
நிறுத்தப்பட்டிருக்கும்
காரின் மேல் புரண்டு விழுந்து
குதித்து
விளையாடிக்கொண்டிருக்கின்றன

சில குரங்குகள்
வேப்ப மரத்திலிருந்து
வீட்டின் மேல் தாவுவதும்
வீட்டின் மேலிருந்து
வேப்ப மரத்துக்குத் தாவுவதுமாய்
சாகசங்களை
நிகழத்திக்கொண்டிருக்கின்றன

சில குரங்குகள்
பார்வையாளர்களாக மாறி
வீடுகளின் சுற்றுச்சுவர்களின்
மேலமர்ந்து
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன

வனத்தை அழித்த மனிதர்கள்
வீட்டுக்கதவுகளைச் சாத்திக்கொண்டு
பட்டாசு வெடித்தும்
விநோதச் சப்தங்களை எழுப்பியும்
குரங்குகளை விரட்டுகிறார்கள்

வனமிழந்த குரங்குகள்
மனிதர்களைச் சபித்தபடி
சிதறி ஓடுகின்றன
தங்களுடைய வனம் வேண்டுமென

-சௌவி

செவ்வாய், 12 மே, 2020

கேள்விகளற்றவன்

கேள்விகளற்றவன்


பறக்கச் சிறகுகளிருந்தும்
போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலையை
தத்தித் தத்தி நடந்து கடக்கும்
காகத்திடம்-

பளிச்சென மிக அழகாய்
எல்லாக்குப்பைகளையும் கூட்டிய பின்னரும்
கொஞ்சநேரம்கூட அச்சுத்தத்தைப் பேணுவோமென்ற
பிரக்ஞையின்றி
உடனே இலைகளை உதிர்க்கத்
துவங்கியிருக்கும் மரத்திடம்-

மரத்திலிருந்து இறங்கி வந்து
பயந்து பயந்து
மரத்தடிக் கடையில் இட்லியைக்
கொரித்துக்கொண்டு ஓடும் அணிலைத்
தடுக்காத பாட்டியிடம்-

யாருடைய அவசரத்தைப் பற்றியும்
கவலைப்படாமல்
எந்த வாகனச் சப்தத்துக்கும் பயப்படாமல்
சாலை நடுவில் தவறி விழுந்திருக்கும்
வைக்கோல் கற்றையை
உதறியபடி தின்றுகொண்டிருக்கும்
மடி கனத்த பசுவிடம்-

சீரான இடைவெளியில்
ஒவ்வொரு வாகனத்தையும்
சிறிது தூரம் துரத்தித் துரத்தித்
தன்நிலை திரும்பும் நாயிடம்-

ஏன் என்ற கேள்விகேட்க
என்னிடம் எந்தக் கேள்வியுமில்லை
நான் கேள்விகளற்றவன்

-சௌவி

நிராகரிப்பு


நிராகரிப்பு


நிராகரிக்கப்பட்ட வணக்கமொன்று
அழுதுவிட்டு அமைதியாகிறது
அமைதியாயிருந்துவிட்டு
மறுபடி அழத்தொடங்குகிறது

நிராகரிக்கப்பட்ட வணக்கமொன்று
வசை வார்த்தைகளைக் கொண்டு
சபிக்கிறது

நிராகரிக்கப்பட்ட வணக்கமொன்று
வன்மத்தின் விதையொன்றை
நட்டு வளர்க்க ஆரம்பிக்கின்றது

நிராகரிக்கப்பட்ட வணக்கமொன்று
திமிரின் இலக்கணங்களைக்
கற்றுக்கொள்ளத் துவங்குகிறது

நிராகரிக்கப்பட்ட வணக்கமொன்று
அலட்சியத்தின் ருசியையும்
ஆணவத்தின் ருசியையும்
கைகளுக்குச் சொல்லிக்கொடுக்க
ஆரம்பிக்கிறது

நீங்கள் நிராகரித்துவிட்ட வணக்கமொன்று
உங்களை நிராகரிப்பதற்காக
சரியான சந்தர்ப்பமொன்றைத் தேடியபடியே
உங்கள் பின்னால் வந்துகொண்டிருக்கிறது

-சௌவி

தொடர்பு


தொடர்பு


காலையில் எழுந்து 
நடைப்பயிற்சிக்கோ தோட்டத்துக்கோ
நடந்துபோய்க்கொண்டிருக்கிறீர்கள்
மரமொன்று தன் ஈர இலைகளால் 
புன்னகைத்து
உங்கள் நாளைத் துவக்கி வைக்கிறது
அந்த மரத்துக்கு நீங்கள்
தண்ணீர்கூட ஊற்றியதில்லை

பதட்டமாக 
எங்கோ சென்றுகொண்டிருக்கிறீர்கள்
வழியோர மரமொன்று
தன் விரல்களெங்கும் ஏந்திக்கொண்டிருக்கும் மலர்களால்
உங்கள் மனசை நீவி நீவி
உங்களை ஆசுவாசப்படுத்துகிறது
அந்த மரத்துக்கு நீங்கள்
எந்த உதவியும் செய்ததில்லை

வெயில் தாங்கமுடியால்
வியர்வை வழிய
நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள்
நிழலை நீட்டி வரவேற்கும் மரமொன்று
உங்களை நிறுத்தி
உங்கள் வியர்வைத் துளிகளைத்
துடைத்துவிடுகிறது
அந்த மரத்துக்கு நீங்கள்
ஆகாரமெதுவும் கொடுத்ததில்லை

களைப்போடு
எங்காவது இளைப்பாறலாம்
என நினைக்கிறீர்கள்
மரமொன்று தன் மடியிலேந்தி
உங்களைத் தாலாட்டி
உறங்க வைக்கிறது
அந்த மரத்தை
நீங்கள் நட்டதில்லை

சம்பந்தமில்லாதவர்களாலேயே
கட்டமைக்கப்படுகிறது
வாழ்வின் பெரும்பங்கு
ஒவ்வொருவருக்கும்

-சௌவி


மாலை முத்தம்

மாலை முத்தம்


கற்றாழையின் கூர் முனையில்
நின்றுபார்த்துவிட்டுக் கீழிறங்கும்
எறும்பொன்றின் கால்களைப்பற்றிக்கொள்ள நினைக்கும் கற்றாழையால்
முடியவில்லை
எறும்பின் கால்களைக் கட்டுப்படுத்த

மாலை நேரத்து
மஞ்சள் சூரியனிடமிருந்து
தன் நிழலை எடுத்து
வெள்ளாமைக் காட்டில்
விளைந்து நிற்கும் பயிர்களுக்கு
வலிக்காமல்
பரப்பி வைத்திருக்கிறது
பொழியோரக் கருவேலமரமொன்று

கருவேலமரக் கிளைகளெங்கும்
இசைக்குறிப்புகளைத் தொங்கவிட்டிருக்கும்
கற்றாழைக்குருவிகளின்
பாடலைக் கேட்டு ரசித்தபடி
நகராமல் நின்றுவிட்ட சூரியனைப்
பிடித்துக் கீழே இழுக்கிறது
நீலச்சேலைகட்டி அமர்ந்திருக்கும் மலை

கற்றாழையில் இறங்கிக்கொண்டிருக்கும் எறும்பையும்
பாடலிசைக்கும் கற்றாழைக்குருவிகளையும்
பார்த்தபடி மலரும்
அந்தி நட்சத்திரமொன்று
அவசர அவசரமாய் இறங்கி வந்து
என் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு
வானம் தேடுமெனச் சொல்லிவிட்டு
ஓடுகிறது

பாலைக்குடித்துவிட்டு
கிணற்று மேட்டுக்கு ஓடிய
கன்றுக்குட்டியைப் பிடிக்க ஓடுகிறேன்
கிணற்றுக்குள் குளித்துக்கொண்டிருக்கிறது
வானத்துக்குப் போவதாய்ச்
சொல்லிவிட்டுப்போன
கள்ள நட்சத்திரம்

-சௌவி





பொறுமை




பொறுமை


இந்த மலைகளைப் போல
உங்களாலும் என்னாலும்
அவ்வளவு
பொறுமையாக இருக்கமுடியாது

என்ன நடந்தபோதும்
எங்கேயும் எழுந்துபோகாமல்
இருந்த இடத்திலேயே
உட்கார்ந்துகொண்டிருக்கும்
மலைகளைப்போல
பொறுமையுடையவர்கள் யாரும் இல்லைதான்

மலைகள் எழுந்து நடந்துபோக ஆரம்பித்தால்
பூமியில் அதிகாரம் மிகுந்தவைகளாக
மலைகள்தான் இருக்கக்கூடும்
மலைகளை எதிர்த்து நிற்கும் பலம்
யாருக்குமில்லை

மலையின் மீது வெயிலடிக்கிறது
மலையின் மீது மழை பொழிகிறது
மலையினை வெட்டி வெட்டி
பாதை அமைக்கிறார்கள்
மலையை உடைத்து உடைத்துக்
கற்களாக்கி விற்கிறார்கள்
மலைக்குள் குழி தோண்டி
வெடி வைத்துப் பிளக்கிறார்கள்

என்ன செய்தபோதும்
திருப்பி எதிர்க்காமல்
எப்படி
இப்படிப் பொறுமையாக இருக்கமுடிகிறது இந்த மலைகளால்?

நினைக்க நினைக்க
விரியும் ஆச்சர்யத்தைக் கடந்து
அதற்கப்பால் போக முடியவில்லை

நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்
மலைகளெல்லாம்
நடந்துபோவதாகவும்
மலைகள் மாநாடு கூட்டுவதாகவும்
ஒரு நாட்டின் மலைகளுக்கும்
இன்னொரு நாட்டின் மலைகளுக்குமிடையே
சண்டை ஏற்பட்டுத் 
தாக்கிக்கொண்டதாகவும்

அப்பப்பா..
பயங்கரமாக இருந்தது கனவு

காலையில் எழுந்ததும்
ஓடிச்சென்று
சன்னலைத் திறந்துபார்த்தேன்
தூரத்திலிருந்த மலை
எங்கேயும் போகாமல்
அங்கேயே நின்றுகொண்டு
எனைப் பார்த்துப் புன்னகைத்தது

-சௌவி

தூக்கம்


தூக்கம்


நேற்று மதியம் நான்
நிலவைக் கட்டிப்பிடித்துத் தூங்கிக்கொண்டிருந்தேன்
இரண்டு நாட்களுக்குமுன் ஊருக்குப் போன நீ
திரும்பி வந்து
நிலவைக் கட்டிப்பிடித்துத் தூங்குவதைப் பார்த்து
கோபித்துக்கொண்டாய்
யாருக்குத்தான் கோபம் வராது?
இதுபோன்ற சூழலில் கோபம் வரவேண்டும்
சின்ன வயதில் அம்மாவைக் கட்டிப்பிடித்தே
தூங்குவது வழக்கம்
அம்மாவைக் கட்டிப்பிடித்துப் படுத்தபின்தான்
தூக்கமே வரும்
எப்போது உறங்குகிறேனெனத் தெரியாமலே
தூங்கிவிடுவேன்
கொஞ்சம் வளர்ந்தபிறகு
அம்மாவிடமிருந்து தனியாகப் படுக்க ஆரம்பித்தபின்
கொஞ்சநாட்கள் கட்டிப்பிடித்தலின்றித்தான்
தூங்கிக்கொண்டிருந்தேன்
அது ஓர் அந்திப் பொழுதில்
மிகப் பெரியதாய் கிழக்கு வானில் பூத்துவந்த
பௌர்ணமி நிலவைப் பார்க்கும்வரைதான்
அன்றுதான் காதலின் மலரொன்று
என் மனக்காட்டில் அவ்வளவு வாசத்தோடு பூத்தது
அன்றிரவு நிலவைக் கட்டிப்பிடித்துத்தான் தூங்கினேன்
பிறகு
சில நாட்கள் மலையைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் நட்சத்திரத்தைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் மேகத்தைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் நதியைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் வானவில்லைக் கட்டிப்பிடித்தபடி
சில நாட்கள் கடலைக் கட்டிப்பிடித்தபடி
தூங்குவது வழக்கமாகிப்போனது
இவ்வெவற்றாலும் என்னை சமாதனப்படுத்தமுடியாத
சமயத்தில்
அம்மாவைக் கொஞ்ச நேரம் கட்டிப்பிடித்துக்கொள்வேன்
அம்மா தரும் ஆசுவாசத்தைப் போலவோ
ஆறுதலைப்போலவோ
யாராலும் தந்துவிட முடியாதுதான்
இப்படிக் கட்டிப்பிடித்துத் தூங்குவது
அடிக்கடி மாறிக்கொண்டிருந்தாலும்
உன்னைப் பார்த்த நாளிலிருந்து
உனக்குத் தெரியாமலே உன்னைக் கட்டிப்பிடித்து
தூங்க ஆரம்பித்துவிட்டேன்
இதை உன்னிடம் சொன்னபோது
அன்றும் இப்படித்தான் கோபித்துக்கொண்டாய்
உன்னைக் கட்டிப்பிடித்துத் தூங்க ஆரம்பித்ததிலிருந்து
எனக்கு நிலா நட்சத்திரம் வானவில் நதி அருவி
கடல் என எல்லாமே நீயாகிப்போனாய்
நீ ஊருக்குப் போய்விடும் நாட்களில்
உன்னை நிலவாக்கியோ நட்சத்திரமாக்கியோ
கடலாக்கியோ நதியாக்கியோ
கட்டிப்பிடித்துத் தூங்கப் பழகிவிட்டேன்
நேற்றும் அப்படித்தான்
உன்னை நிலவாக்கி கட்டிப்பிடித்துத்
தூங்கிக்கொண்டிருந்தேன்
ஊரிலிருந்து வந்த நீ
பார்த்தவுடன் கோபித்துக்கொண்டாய்
பிறகு அந்த நிலவை உன்னிடமே கொடுத்து
பார்க்கச்சொன்னேன்
வெகு நேர ஆராய்ச்சிக்குப்பிறகு
நிலா நீதானெனத் தெரிந்தபிறகு
அவ்வளவு சந்தோஷப்பட்டாய்
இப்போது உன்னை நட்சத்திரமாக்கிக் காட்டு
கடலாக்கிக் காட்டு
நதியாக்கிக் காட்டு
எனக்கேட்டு என்னைத் தொல்லைசெய்ய
ஆரம்பித்துவிட்டாய்
உன்னை நீயாகவே கட்டிப்பிடிப்பதுதான்
எனக்கு மிகப்பிடிக்குமடி

-சௌவி

பறவை



பறவை


கடலைத் தாண்டி வந்த பறவை
ஒரு சிறகால் வானத்தையும்
இன்னொரு சிறகால்
கடலையும் வென்றிருந்தது
எந்தச் சிறகு கடலை வென்றது
எந்தச் சிறகு வானத்தை வென்றது
எனக் கண்டுபிடிக்கமுடியவில்லை
இரண்டுக்கும் நீல நிறம்
இரண்டு சிறகுகளிலும்
தண்ணீரிருக்கிறது
இரண்டு சிறகுகளிலும்
அலையிருக்கிறது
இரண்டு சிறகுகளிலும்
காற்றிருக்கிறது
எது வானத்தை வென்றது?
எது கடலை வென்றது?
எனக் கண்டுபிடிக்க முடியவில்லை
கடலைப் பார்த்தேன்
கடலுக்குள் வானம் தெரிந்தது
வானத்தைப் பார்த்தேன்
வானத்தில் கடல்
நடந்துபோய்க்கொண்டிருந்தது

-சௌவி