மழையைக் கொணரும் குருவிகள்
கோடை வெயிலில்
காய்ந்து போன கிணறும்
வறண்டு போன குளமும்
தண்ணீரைத் தொலைத்திருக்க
தண்ணீர் தேடி நாக்கு வறண்டிருந்த
என் மாடுகளுக்காக
கருவேலமரத்துக்
கற்றாழைக்குருவிகளிடத்து
உதவி கேட்டிருந்தேன்
உதவுவதாய்ச் சொல்லிவிட்டு
இரண்டு நாட்களுக்கு முன்னர்
வானேறிக் கடல்நோக்கிப் பறந்த குருவிகள்
இப்போது மேகங்களை
இழுத்துக்கொண்டு வருகின்றன
எம் கிணறுகளை நோக்கியும்
எம் குளங்களை நோக்கியும்
பருவமழை துவங்கிவிட்டதாய்
வானொலியிலும்
தொலைக்காட்சியிலும்
செய்தித்தாள்களிலும்
அறிவிப்பு செய்கிறீர்கள் நீங்கள்
-சௌவி






