இக்கோடையிலும்
மா மழையைப் பொழிகிறாய்
என் சாலைகளில்..
நீர் நிறைந்தோடும் நதிக்கரையோரப்
புல்வெளியின்
மரங்களற்ற ஒற்றையடிப்பாதையில்
என்னோடு நடந்தபடி
என் சாயங்காலங்களைக் கவிதைகளாக்குகிறாய்..
வர்ணங்களைப் பூசிக்கொண்ட அந்திவானம்
உன்னைப் பார்த்துப் பார்த்து
அலங்காரம் செய்து தோற்கிறது..
கரைகளோடு
உன்னைப்பற்றிப் பேசிக்கொண்டே
நகரும் நதி
நின்று ரசிக்க எத்தனித்து
முடியாமல் நகர்கிறது
உன்னைப்பார்த்த மகிழ்ச்சிகளை
பூக்களென ஏந்திக்கொண்டு..
திரும்பிய பறவைகள்
நடந்துபோகும் நம்மைக்கவனித்தபடி
பறந்தபடியே
ஒரு அந்திப்பாடலை இசைக்கின்றன..
மஞ்சள் மலர்களை
தன் மேனியெங்கும் இறைத்துவைத்திருக்கும்
தூரத்துத் தார்ச்சாலை
நம்மை அழைக்கிறது..
உன் விரல்களைப் பற்றியபடியே
அத்தார்ச்சாலை தொடுகிறோம்..
மரங்களின் கிளைகள்
கிடார்களாய் மாறி
மெதுவாய் இசைக்கத் தொடங்குகின்றன
உனக்கும் எனக்கும் பிடித்த இசையை..
நம் காதல்கணங்கள் நிரம்பியிருக்கும்
காலத்தின் கைகளில்
பூத்து மணம் பரப்புகின்றன
நமக்குப் பிடித்த வாகைப்பூக்கள்..
-சௌவி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக