திங்கள், 27 ஏப்ரல், 2015

வெளிச்சம்                    24.04.2015

     இன்று என் கவிதைகளைப்பற்றிப் பேசலாமென கவிஞர்.அம்சப்ரியா அழைத்திருந்தார் ஒரு வாரத்திற்கு முன்பே. என்னுடைய கவிதைகள் அடங்கிய ஒரு தொகுப்பை அவரிடம் கொடுத்திருந்தேன் சீர்படுத்தவும் செம்மைப்படுத்தவும். இன்று காலையில் அழைத்து நினைவூட்டினார் சந்திப்பைப்பற்றி. இன்றைய சந்திப்புக்காக நான் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்திலேயே வந்துவிட்டேன் வழக்கமான பேருந்துப் பயணத்தைத் தவிர்த்துவிட்டு.

     கவிஞர்.அம்சப்ரியா காலையிலேயே அழைத்து மறுபடியும் நினைவூட்டினார். பில்சின்னாம்பாளையம் கிராமத்தில் அம்சப்ரியாவின் வீட்டிலேயே சந்திக்கலாமென்றார். பின் அவருடைய இல்லத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டம் இன்று என்றும், அந்தக் கூட்டத்தில் புத்தக வாசிப்பும் கல்வியும் என்ற தலைப்பில் என்னைப் பேசவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

     நான் இன்னும் அந்த அளவிற்குப் பேசவராத, தடுமாறுகின்ற மேடைப் பேச்சைக் கொண்டவனாகத்தான் இருக்கின்றேன். ஆனாலும் எனக்கான பயிற்சிக்களமாக, என்னை நன்றாகப் பேசுபவனாக மாற்ற கவிஞர்.அம்சப்ரியா ஏற்படுத்தியிருக்கிற பயிற்சிக்களம் என்பதால், மகிழ்வுடன் சாயங்காலப்பொழுதை எதிர்பார்த்திருந்தேன்.

     ஐந்து மணிக்கு பில்சின்னாம்பாளையம் கிராமத்தை அடைந்துவிடலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அலுவலகத்தில் வந்த அவசரவேலை காரணமாக தாமதமாகிப்போனது. பொள்ளாச்சியை அடைவதற்கே மாலை 6:30 ஆகிவிட்டது.

பொள்ளாச்சியிலிருந்து பில்சின்னாம்பாளையம் நோக்கி வாகனத்தை விரட்டத்துவங்கினேன். மெல்ல மெல்ல மங்கிக்கொண்டிருந்த பகலும், தன்னை எழுத ஆரம்பித்திருந்த இரவும் சந்தித்துப்பேசிக்கொண்டிருந்த மாலை இதமாக இருந்தது. அதுவும் அந்தத் தென்னை மரங்களடர்ந்த பாதைக்கு ஒரு பேரழகைக் கொடுத்திருந்தது. அந்திமாலை தனக்கேயுரிய தென்றலின் இசையை தேகத்தின் எல்லாச் செவிகளுக்குமாய் இசைத்துக்கொண்டிருந்தது. ஆனந்தமாயிருந்தது இருசக்கர வாகனப்பயணம்.

     பில்சின்னாம்பாளையம் கவிஞர்.அம்சப்ரியாவைப் போலவே கனிவும் பொலிவும் கொண்டிருந்தது. கவிஞர்.அம்சப்ரியாவின் இல்லத்தை அடைந்தேன். அத்தனை முகமகிழ்வோடு வரவேற்ற அம்சப்ரியாவின் முகம் பார்த்ததும் என் மனசுக்குள் சந்தோஷத்தில், உற்சாகத்தில் முளைத்தன பல்லாயிரம் மலர்கள். பின் கவிஞர்.அம்சப்ரியாவின் இல்லத்தில் அவர் உள்ளத்தைப்போலவே கவிதைப்புத்தகங்கள் நிறைந்திருந்த அறையில் அமர்ந்து அவரோடு பேசிய நிமிடங்கள் மறக்கமுடியாதவை. தன்னலமில்லா ஒரு கவிஞனாக, நிறைய படைப்பாளர்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் களமாக, தன்னை மாற்றிக்கொண்டு இந்தச் சமுதாயத்தை இலக்கியத்தின் மூலமாக உய்யச்செய்யவேண்டுமென தன் நெய்தலை இடைவிடாது செய்துகொண்டிருக்கும் ஒரு போராளியின் அருகில் அமர்ந்திருந்த நிமிடங்களை என் வாழ்வின் ஆசிர்வதிக்கப்பட்ட நிமிடங்கள் என்பேன்.

     என் கவிதைகள் பற்றியும், தற்காலக் கவிதைகளின் போக்கு பற்றியும், கவிதைக்கான தளங்கள் பற்றியும் வெகு சிறப்பாக , எப்படியான கவிதைகள் எழுதப்படவேண்டுமென்று என்னை ஆற்றுப்படுத்தினார் கவிஞர்.அம்சப்ரியா. அவருடைய அந்த அறை புத்தகங்களால் நிரம்பியிருந்தது. புத்தகங்களெல்லாம் வெகு நேர்த்தியாக அவ்வறையை அழகூட்டிக்கொண்டிருந்தன. வீட்டை அலங்கரிப்பதற்கு புத்தகங்களைவிட சிறந்த பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற எப்போதோ படித்த வாசகத்திற்குப் பொருள் சொன்னது கவிஞர்.அம்சப்ரியாவின் இல்லம்.

     என்னிடம் இரண்டு சிறந்த கவிதைத்தொகுப்புக்களைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். எப்போதுவேண்டுமானாலும் வந்து புத்தகங்களைப் படிக்கலாமென்றும் சொன்னார். எழுதத்துவங்குவோர் எல்லோரையும் ஊக்கப்படுத்தும் இப்படியொரு மனிதரை, கவிஞரை நான் சந்தித்ததில்லை. அற்புதங்கள் எப்போதாவதுதான் நிகழும் என்பார்கள். அதை இப்போதுணர்ந்தேன் நான். தன்னுடைய வீட்டை எல்லோரும் படிக்கும் நூலகமாக ஆக்கியிருக்கும் கவிஞர்.அம்சப்ரியாவின் செயலை, எண்ணத்தை எப்படிப்  பாராட்ட...?  வார்த்தைகளில்லை.

     புன்னகை பூ ஜெயக்குமார் புன்னகைகளோடு வந்தார். உண்மையான புன்னகைகள்தான் எவ்வளவு வெளிச்சத்தை மனசுக்குள் ஏற்படுத்துகின்றன? விவேகானந்தர் கனவு கண்ட இளைஞராக சமுதாயப் பணியாற்றும் புன்னகை பூ ஜெயக்குமார், தான் கற்ற கல்வியை மலரத் துடிக்கும் செடிகளின் மீது ஒரு பரிதியின் கதிரென ஊற்றிக்கொண்டிருப்பவர். ஒரு தேநீருக்குப் பிறகு இலக்கியக் கூட்டம் துவங்கியது கவிஞர்.அம்சப்ரியா அவர்களின் வீட்டு மொட்டை மாடியில். பில்சின்னாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வந்திருந்தார்கள். நானும் புன்னகை பூ ஜெயக்குமாரும் சிறப்பு விருந்தினர்கள் என அறிமுகப்படுத்தப்பட்டோம். ஒரு கூட்டம் எப்படி நடத்திமுடிக்கப்படவேண்டும் என்ற வரையறையோடு, இலக்கணத்தோடு நடந்தது கூட்டம்.

     முதலில் சிறு விளையாட்டு. அவ்விளையாட்டில் எல்லோருடைய மனசும் மகிழ்ச்சிக்கு மாறியது. எண்ணங்களை ஒருமுகப்படுத்தும் ஆரம்பமாகவும் அவ்விளையாட்டு அமைந்தது. பின் வரவேற்புரை, சிறப்புத் தலைப்புக்களில் பேச்சு எனக் களைகட்டியது கூட்டம். புன்னகை பூ ஜெயக்குமார் ‘கற்க கசடற’ என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக , எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் ஒரு கதையுடன் தன் உரையைச் சிறப்பாக முன்வைத்தார். அதற்குப் பிறகு நான் நடமாடும் நூலகத்தை திறந்து வைத்து புத்தக வாசிப்பும் கல்வியும் என்ற தலைப்பில் (வழக்கமான தடுமாற்றங்களோடு) பேசினேன். பின்னர் வினாடி வினா நிகழ்ச்சி. பின்னர் புகை பிடிக்க மாட்டேன், மது அருந்த மாட்டேன் என்ற உறுதி மொழியை எல்லோரும் ஏற்றுக்கொண்டு விழா இனிதே நிறைவுபெற்றது.

     நடமாடும் நூலகத்தின் மூலம் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் ஒரு புத்தகம் வழங்கப்பட்டது. ஒரு வாரம் முழுக்க அப்புத்தகத்தைப் படித்துவிட்டு அடுத்த கூட்டத்திற்கு வரும்போது அப்புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வேறு ஒரு புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் புத்தகம் வாங்க வழியில்லாதோரும் , எந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பது எனத் தெரியாதோரும் தங்களுடைய அறிவை விசாலமாக்கிக்கொள்ளலாம். ஒரு புத்தகத்தை திறக்கும்போது நிறைய கெட்ட வாசல்கள் மூடப்படுகின்றன. நல்ல பாதையில் நடப்பதற்கான முதலடி எடுத்து வைக்கப்படுகிறது. அப்படியானதொரு நல்ல பாதையை எல்லோருக்கும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் கவிஞர்.அம்சப்ரியா நடமாடும் நூலகத்தின் வாயிலாக.

     இக்கூட்டத்திற்கு வந்திருந்த இளைஞர்களின், சிறுவர்களின் கண்களில் அவ்வளவு ஆர்வம். கற்க வாய்ப்பில்லாமலும், வசதியில்லாமலும் , வேறு வழிகளில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களையும் தேடிப்பிடித்து, அவர்களுக்கு போதித்து, அவர்களை நல்வழிப்படுத்தி, அவர்களின் மூலமாக நல்ல சமுதாயத்தைக் கட்டமைக்கப் போராடிக்கொண்டிருக்கும் கவிஞர்.அம்சப்ரியாவின் செயல் மகத்தானது. இதுபோன்ற முயற்சிகளைப் பேசிவிட்டுப் போய்விடுபவர்களே அதிகம். அதைச் செயலாக்கிக்கொண்டிருக்கும் கவிஞர்.அம்சப்ரியா நமக்குக் கிடைத்திருக்கின்ற ஒரு சிறந்த சமுதாயச் சிற்பி. பில்சின்னாம்பாளையம் கிராமத்தை மதுவற்ற முன்னோடி கிராமமாக மாற்ற,  விடாது களப்பணியாற்றும் முயற்சி நிச்சயம் வெற்றியைத் தரும்.

தற்போதைய காலகட்டத்தில் கெட்டுப்போவதற்கு ஆயிரம் வழிகள். கெட்டதைச் சொல்லித்தர ஆயிரம் கைகள். இவற்றினூடே நல்வழிப்படுத்தும் கரங்களைக் காண்பதரிது. வாய்ப்பற்றோரை வாய்ப்புள்ளவனாக்க, கெட்ட வழியில் வீழ்ந்துவிட்டோரை நல்வழிப்படுத்த, இப்படியொரு கூட்டத்தைக் கட்டமைக்க, எத்தனை பெரிய உழைப்பைச் சிந்தியிருக்க வேண்டும் கவிஞர்.அம்சப்ரியா..!  வெகு ஆச்சர்யமாகவும் , மலைப்பாகவும், பெருமையாகவும் இருந்தது.

சிறு உதவிகளுக்கோ, அரசாங்கத்தின் உதவிகளுக்கோ தன்னுடைய பெயரை பெரிய அளவில் விளம்பரப்படுத்திக் கொள்ளும் மனிதர்களாலான உலகம் இது. விளம்பரத்திற்காகவே உதவிகள் செய்யும் மனிதர்கள் நிறைந்த உலகம் இது. இப்படிப்பட்ட உலகில் எவ்வித விளம்பரமின்றி, ஆர்ப்பாட்டமின்றி இச்சமுதாயத்தை நல்வழிக்கு ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞர்.அம்சப்ரியா இச்சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கும் ஒரு மாமனிதர். அவருடைய கவிதைகளைப் போலவே அவருடைய செயல்களும் வெகு சிறப்பு.

கூட்டம் முடிந்து எல்லோரிடமும் விடைபெற்று இல்லம் நோக்கிப் புறப்பட்டேன். செம்பூக்களை நீட்டி வரவேற்ற , கூட்டம் முழுவதையும் அமைதியாக கிளைகளை அசைத்து அசைத்து ரசித்த,  அவ்விரு குல்மொஹர் மரங்களிடமும் சொல்லிவிட்டு, கவிஞர்.அம்சப்ரியா படிக்கக் கொடுத்த கவிதைத் தொகுப்புகளையும், அந்த குல்மொஹர் மரங்கள் கொடுத்த கவிதைகளையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். மணி இரவு 9 ஐத் தாண்டியிருந்தது. அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன். நட்சத்திரங்களற்ற வானமாயிருந்தது. வெளிச்சம் மிகு நட்சத்திரங்களை கவிஞர்.அம்சப்ரியா உருவாக்கிக்கொண்டிருப்பதால் இனி நம் வெளிச்சம் தோற்றுப்போகுமென்று வான் நட்சத்திரங்கள் காணாமல் போய்விட்டன போலும். வாகனத்தை விரட்டினேன். மனதின் புதிய வெளிச்சத்தால் பாதையின் இருள் காணாமல் போயிருந்தது.

-சௌவி




நன்றி


கவிஞர்.அம்சப்ரியா
புன்னகை பூ ஜெயக்குமார்
பில்சின்னாம்பாளையம் நண்பர்கள்
குல்மொஹர் மரங்கள்
பொள்ளாச்சி to ஆழியார் சாலை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக